தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் இன்று (மார்ச் 11) ட்ரோன் தக்குதல்களை நடத்தியுள்ளது. துபை விமான நிலைய ஓடுபாதையில் ட்ரோன்கள் விழுந்து நொறுங்கியதில் இந்திய உள்பட 4 பேர் காயமடைந்தனர். இருப்பினும் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
வளைகுடா நாடுகளை ஈசல் போல் ஈரானிய ட்ரோன்கள் முற்றுகையிட்டு வருகின்றன. இன்று காலை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு கானா நாட்டவரும், ஒரு வங்கதேச நாட்டவரும் காயம் அடைந்தனர்.
இந்திய நாட்டவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இயக்கப்படுகிறது.
நீண்ட தூர விமான நிறுவனமான எமிரேட்ஸின் தாயகமான துபாய் சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கு உலகின் மிகவும் பரபரப்பானது.
விமான நிலையம் போரில் குறிவைக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வருவதாகவும், அதற்கான அட்டவணை தயாரித்து வருவதாகவும் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
