இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை மறுதினம் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கிறார். அத்துடன், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.
குறிப்பாக, ‘தித்துவா’ புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு, அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்திய துணை ஜனாதிபதி இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல்,சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது துணை ஜனாதிபதியுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு வருகை தருகிறது.
சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
