ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார, சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அத தெரண கூறுகிறது.
இதன்படி, சந்தேக நபரை ஏப்பிறல் மாதம் 28ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அரச காணிக்கான நிர்மாணத் திட்டமொன்றை அங்கீகரிப்பதற்கு, அதன் உரிமையாளருக்கு சாதகமான முறையில் செயற்பட்டதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
