முன்னாள் ஐஜிபி தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம என்ற வலுவான சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்தின மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விக்கிரமரத்தின தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், “துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழக்கும் போது அவருக்கு 63 வயதாகும்.
விக்ரமரத்னவின் மகனின் மனைவி, வேறொருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.
அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க: முன்னாள் ஐஜபி விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் முன்னாள் ஐஜிபி தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
