அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானிகி ராஜரத்ன நேற்று மாலை (30) தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளின் நிலைமைகள் கள் விஜயம் மேற்கொண்ட பின்னர் இது குறித்த சிறப்பு கலந்துரையாடல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தால் பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தலிங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை, கஹவத்த, புஸ்ஸல்ல உள்ளிட்ட பல தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
நேற்று (2025.11.30) நிலவரப்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் இந்த மோசமான பேரிடர் காரணமாக 14448 குடும்பங்களை சேர்ந்த 56770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மூன்று வீடுகள் முழுமையாகவும் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு (996) வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதுடன் நான்கு வணிக நிறுவனங்களும் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பேரிடர் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறுகிறது.
இதற்கிடையில், 339 தோட்டம் தொடர்பான குடும்ப அலகுகள் தற்போது பாதுகாப்பான இடங்களில் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்கள்.
அவர்களை மீண்டும் அந்த வீடுகளில் மீள்குடியேற்ற முடியாது என்பதால், அவர்களை வேறு தற்காலிக இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தோட்ட வீடுகளுக்கு அருகில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள தேக்கு, தீப்பெட்டி, தென்னை மற்றும் பலா போன்ற மரங்களை உடனடியாக தறித்து அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
தோட்டக் குடும்பத்தினர்களுக்கு சுகாதார வசதிகள், சாலைகள் மற்றும் முன்பள்ளி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் தோட்ட முகாமைத்துவங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்திய அரசாங்கம் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டக் குடும்பங்களுக்கு 263 வீடுகளை புதிதாக அமைத்து வருகிறது. என்றார்
தோட்டக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இதில் முன்னாள் சபகமுவ மாகாண சபை உறுப்பினரும் ஆளுநரின் இணைப்புச் செயலாளருமான புஷ்பகுமார திசாநாயக்க, குருவிட்ட பிரதேச சபையின் தலைவர் விகசித்த புஷ்ப சூரிய, இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் அமில சுரஞ்சித் விஜேரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர் இரவீந்திரன்

