மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய காணி,வீட்டு உரிமையை வலியுறுத்தி மலையக “மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை” என்ற தலைப்பில் மிக முக்கியமாக பதினோரு விடயங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரம் இன்று 15 ஆம் திகதி சாமிமலை நகரில் விநியோகிக்கப்பட்டது.
இந்நடவடிக்கைகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் சிப்ஸ் நிறுவனமும் சங்கு கலைகழகமும் இணைந்து முன்னெடுத்தன.
ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு சாமிமலை நகரில் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதே தினத்தில் நோர்வூட் மற்றும் பொகவந்ததலாவ உள்ளடக்கிய நகரங்களிலும் இந்தத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
மிக முக்கியமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி இலங்கை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தித்துவா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கான காணி வீட்டு உரிமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில் மலையக மக்கள் நீண்ட காலமாக காணி வீட்டுரிமை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆனால் மாறி மாறி ஆட்சி செய்த இந்த அரசாங்கங்கள் இது தொடர்பாக ஒரு காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது தொடர்பாக அட்டன் பிரகடத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு அமைவாக மலையக மக்களுடைய காணி வீட்டு உரிமையை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய பிரஜைகளாக இந்த நாட்டிலே வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிததார்கள்.
ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்த போதும் இது தொடர்பாக காத்திரமான முடிவை எடுக்காமல் இந்த மக்களுடைய காணி வீட்டுரிமை பிரச்சனை பின் தள்ளப்பட்டு இருக்கின்றது.
ஆகவே மக்களையும் இது சார்ந்த பங்குதாரர்களையும் தெளிவு படுத்துவதற்கான நடவடிக்கையிலேயே மிக முக்கியமாக 11 விடயங்களை முன் கொண்டு வந்து அது தொடர்பாக இந்தத் துண்டு பிரசங்கங்களை விநியோகித்து மக்களைத் தெளிவுபடுத்தி ஒரு பாரிய அணி திரட்டலை செய்வதற்காக இப்படணியை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்.


