கொத்மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொத்மலை – கம்பளை (B431) பிரதான வீதி மே 14ஆம் திகதி பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னர் மண்சரிவு ஏற்பட்டு வீதியின் ஒரு பகுதி உள்வாங்கிய பரகம்மனை பகுதியில், மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி. இந்திக லலித் தெரிவித்தார்.
கம்பளையையும் கொத்மலையையும் இணைக்கும் இந்த வீதியானது, கடும் மழைக்காலங்களில் அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடமாகக் கருதப்படுகிறது.
தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில், அப்பகுதியில் உள்ள மலைச்சரிவுகள், நிலப்பரப்பு மேலும் தாழிறங்குவது தீவிரமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, நிலைமை சீராகும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், இந்த வீதியைத் தவிர்க்குமாறும் வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அப்பகுதியைப் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே வீதி மீண்டும் திறக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
கௌசல்யா


