மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள் இன்றி காணப்படுவதனால் பொதுமக்கள் விசனம் தெரிவித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் எதிர்வரும் 15 ம் தேதி ஆரம்பமாகிறது.
மட்டக்களப்பில் இருந்து உகந்தை மலை முருகன் கோவிலுக்குக் கடந்த இரு தினங்களாக தினசரி காலையில் 15 இற்கு மேற்பட்ட போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன
எனினும், மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி இருந்தும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் இந்தக் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள், அடியார்கள், ஊழியர்கள் பல சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
இதையும் படியுங்கள்: மண்ணெண்ணெய்ளில் பஸ் ஓடிய மூவருக்கு அபராதம்
சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பல தடவை தெரிவித்திருந்தபோதிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை
தமது பயணங்களை மேற்கொண்டு மிகுந்த அசௌகரியங்களுடன் சாரதிகள், நடத்துநர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்த அத்தியாவசிய பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே உரிய தரப்பினர் உடனடியாக இந்த அத்தியாவசிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருமாறு அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
