ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஸ்லோவேக்கியா தலைநகர் பிராடிஸ்லாவாவுக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஸ்லோவேக்கியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ் பிளானர் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்தே மாதரம் பாடலுடன் பாரம்பரிய முறைப்படி ரொட்டி, உப்பு வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்லோவேக்கியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
இரு நாடுகளுக்கும் இடையே தொழிலாளர் விவகாரம், பாதுகாப்புத் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பம், குவாண்டம் தொடர்பாடல், உயர்கல்வி, செயற்கை நுண்ணறிவு (AI) இருக்கை,சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதினோரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதியளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக சிறப்புக் குழு அமைப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, இரு நாட்டு வர்த்தக உறவு வலுவடைந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் விண்வெளித் துறையில் முதலீடு செய்ய ஸ்லோவேக்கிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஸ்லோவேக்கிய பிரதமரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார்.
ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ, பிரதமர் மோடியின் நீண்டகாலப் பதவிக்காலத்தையும் தேர்தல் வெற்றிகளையும் ‘உலக அரசியல் அதிசயம்’ என்று பாராட்டினார். செயற்கை நுண்ணறிவு,டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
