இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி கூறிக் கடந்துபோக முடியாது என்று தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
மலையகத் தமிழ்ச் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம்.
அந்தக் கல்வியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர், அந்தக் கல்விக்காக இந்திய அரசாங்கம் மலையக மாணவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்கு சாதாரணமாக நன்றி கூறிக் கடந்து போக முடியாது என்றார்.

கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை கடந்த 79 ஆண்டுகளாக வழங்கும் (இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை ) CEWET அமைப்பின் விருது வழங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (10.08.2026) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு பிரதி அமைச்சர் உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய பி.அமைச்சர்:
ஒரு சமூகத்துக்கு உட்கட்டமைப்புகளை செய்வதை விட அந்த சமூகத்துக்கு கல்வியை வழங்குவது அந்த சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் முன்னோக்கி கொண்டு செல்லும் அந்த வகையில் இந்திய அரசு எமக்கான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் எமது மாணவர்களுக்கு திறமைகள். தகுதிகள் இருந்தும் வறுமை காரணமாக உயர்கல்வி வாய்ப்பினை இழக்கின்றனர். குடும்பச் சூழல். வறுமை காரணமாக உயர்கல்விக்கு செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது.
அதேபோல் CEWET புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்தது மட்டுமல்லாமல் வழங்குகின்ற தொகையையும் அதிகரிப்பது என்பது உண்மையிலே வரவேற்கத்தக்க மகிழச்சிக்குரிய விடயமாகும்.
எனவே, இந்திய அரசு வழங்கும் இந்த புலமைப்பரிசில் தொகையை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி உங்களை நீங்கள் பட்டைத் தீட்டிக்கொண்டு ஒரு கல்வியலாளராக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும் போது, மலையக சமூகம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வரக்கூடிய சமூகமாக மாறும்.
எம் சமூகத்தில் பல பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கல்வியலாளர்கள், என பலர் உயர்ஸ்தானத்தில் இருந்தாலும் கூட எண்ணிக்கை அளவில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
எனவே எண்ணிக்கை அளவில் அதனை அதிகரிக்கும் பொறுப்பு,ம் கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.
எனவே ஒட்டுமொத்த சமூகமும் கடமையை உணர்ந்து செயற்படும் போது இந்த நாட்டில் மிளிரக்கூடிய சமூகமாக எமது மலையக சமூகம் மாறும். அதற்காக மலையக கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நாம் வேகமாக முன்னெடுத்து வருகிறோம்.
