சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் 23வரை ஏற்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது அதிபர் ஊடாக விண்ணப்பங்களைச். சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் இணையவழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தனிப்பட்ட சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
சபரகமுவை மருத்துவப்பீட வளாகம் பிரதமரால் திறப்பு
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.lk/eic ஆகியவற்றின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
மேலும், எதிர்வரம் 23ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன்
