பெருந்தோட்டப் பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் துரைமார் குண்டர்களை அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் இது தொடர்பாக ஆராய்ந்து உடனடியா அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் வீடமைப்பு தொடர்பிலும் பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தினா, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (27/04/2026) திங்கட்கிழமை அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை (CEO) அமைச்சின் அலுவலகத்திற்கு வரவழைத்து உடனடியாக இந்தப் பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிருவாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினார். இவ்வாறு மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதை உடனடியாக நிறுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காணியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் CEO வுக்குப் பிரதி அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.
அத்தோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஐவரினது சம்பளத்தை மீள வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. சகல கோரிக்கைகளுக்கும் கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிகாரியால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலில் பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க, மேலதிகச் செயலாளர் விஜய் கீர்த்தி, தோட்டமுகாமைத்துவக் கண்காணிப்புப் பிரிவு (P.M.M.D) பணிப்பாளர், அமைச்சின் தலைமை அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அஜித் இராமநாதன், பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு


