மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
புத்த சாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய அரசின் கலாபூஷணம் விருது வழங்கும் விழாவிலேயே இவர் பாராட்டிக் கௌரிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி கலாபூஷணம் விருது வழங்கும் விழா கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. அப்போது நாடகத் துறைக்காக இவர் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் கொத்மலை, இறம்பொடை, புரொடொப் மேமலை தோட்டத்தைச் சேர்ந்த இவர், இறம்படை இந்துக் கல்லூரியில் தான் கற்கின்ற காலம் முதல் இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.
இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரை நுவரெலியா, கண்டி, புசல்லாவை பிரதேசங்களில் பல்வேறு சமூக மேடை நாடகங்களை இயற்றித் தயாரித்து; நடித்து சமூக விழிப்பூட்டல்களை செய்து வருகிறார்.
1993 ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியில் கொழும்பு மருதானை டவர் மண்டபம், எல்பின்ஸ்டன் மண்டபம், ஜோன் டி சில்வா மண்டபம் ஆகிய இடங்களில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். “
வாடிய ரோஜாவைத் தேடிய ராஜா”, “பயணம் ஒன்று” “பணத்தால் வந்த வினை”, “இயேசுவின் வழியில் வாசு”, “எங்கே சுதந்திரம்”, “தீர்வு எப்பொது”, “புதிய சிந்தனை” போன்ற நாடகங்களை மேடையேற்றி சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த காட்சியமைப்பு, சிறந்த மேடை அலங்காரம், சிறந்த நாடகம், சிறந்த தயாரிப்பு எனப் பல விருதுகளைத் தனது நாடகத்திற்காகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாடகத் துறைக்காக விருதினைப் பெற்றுக் கொண்டார்.
2003 ஆம் ஆண்டு “புதிய சிந்தனை” நாடக நூலுக்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டார்.
1996 ஆம் ஆண்டு முதல் மலையக நட்சத்திரக் கலைப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கிக் கடந்த இருபத்தொன்பது வருடங்களாக மலையக கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்குத் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், சமூக சேவைகள், ஆன்மிக சேவைகள், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் என்பவற்றை இவ்வமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.
பல இளம் கலைஞர்களுக்குக் களமமைத்துக் கொடுத்து வருகின்ற மலையக வாசுதேவன், தற்பொழுது குறுந்திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாடசாலைகளில் நாடக பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்.
2005 ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் நியமனம் பெற்றுள்ளார்.
1980 ஆம் ஆண்டு “பாட்டுக்குப் பாட்டு” இசை நிகழ்ச்சியில் பாடகர் மலேசியா வாசுதேவனின் பாடலை சிறப்பாகப் பாடியதால் சிரேஷ்ட அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீத் அவர்களால் மலையக வாசுதேவன் எனப் பெயர் சூட்டப்பட்டார். அன்று முதல் இவர் மலையக வாசுதேவன் எனப் புனைபெயரால் அழைக்கப்படுகின்றார்.
இந்த அரச விருது வழங்கும் விழாவில் 200 சிங்கள பிரிவுகளுக்கும் முப்பத்து மூன்று தமிழ் பிரிவுகளுக்குமாக விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிலேயே மலையக நாடகக் கலைஞர், மலையக வாசுதேவன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
பன்விலை ம. நவநீதன்


