வாக்காளர் தொகை அதிகரித்துள்ளது என்றும் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் அடுத்த குடிசன மதிப்பீட்டுக்கு முன்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அட்டன் கலந்துரையாடலில் கலாநிதி இரா ரமேஸ் தெரிவித்தார்
மலையகத்தில் வாக்காளர் தொகை அதிகரித்துள்ளது. அதேநேரம், 2024 குடிசன மதிப்பீட்டில் இந்தியத் தமிழர்/மலையகத் தமிழர் எண்ணிக்கையில் பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனவே, அடுத்த குடிசன மதிப்பீட்டுக்கு முன்னர் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது பலத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஸ் தெரிவித்தார்.
அட்டன் சமூக நல நிறுவனம் நடத்தும் தொடர் மாலைக் கூட்டத்தின் “களம்” சிந்தனைப் பகிர்வு நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் “குடிசன மதிப்பீட்டில் மலையகத் தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமுக செயற்பாட்டாளர் ஏ.ஆர்.சி. ஜோன் நெறிப்படுத்திய நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பத்து வருடங்களுக்கு முன்னர் இன்றைய சமுக வலைத்தளங்களின் ஆதிக்கம் இருக்கவில்லை. மலையக் மக்களின் எழுச்சி பற்றி யாருக்கும் உடனடியாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. மக்களுக்குப் பயனுள்ள தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்பட்டு வருகின்றன. அதில் குடிசன மதிப்பீட்டு விபரங்களும் அடங்கும்.
இலங்கை முழுவதும் 324 பெருந்தோட்டங்களை 23 பெருந்தோட்ட நிறுவனங்கள், 3 அரச தோட்ட நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தகவலின்படி தனியார் சிறு தோட்டங்களில் 8-9 இலட்சம் பேர் உட்பட மொத்தமாகப் பார்த்தால் 13 இலட்சம் மலையக மக்கள் இருக்க வேண்டும்.
ஆனால், 2012 குடிசன மதிப்பீட்டில் 8,39, 504 ஆக இருந்தது 2024 இல் 6,00,360 ஆக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பொருளாதார ரீதியில் இயல்பாகவும், திட்டமிடப்பட்ட கட்டாயக் கருடத்தடையாலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். தோட்டக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு வேலைக்குச் சென்று விட்டதால் சரியான பதிவுகள் இடம்பெறாமல் இருக்கலாம்.
மலையகத் தமிழரா, இந்தியத் தமிழரா, இலங்கைத் தமிழரா என்ற தெளிவு இல்லாமல் விருப்பம் போல பதிவுகளும், மொழி புரியாத குளறுபடியால் பதிவு செய்த அதிகாரிகளின் அசமந்தப் போக்கு,, தமது அடையாளம் தொடர்பாக புரிதம் இல்லாமை, கைக்காசுக்கு வேலை செய்யும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்வங்கப்படாமை போன்ற இன்னோரன்ன காரணங்களும் சனத்தொகை வீழ்ச்சிக்குக் காரணங்களாக உள்ளன.
அதேநேரம், வாக்களர் இடாப்பில் பதிவுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை கணக்கெடுப்புக்குத் தரப்படவில்லை. இதனால், காணி உரிமை, வேலை வாய்ப்பு, வளப்பகிர்வு, தனியார் பல்கலைக் கழகத்துக்கான கோரிக்கை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தைப் மையப்படுத்தி “கலாசார சபை” ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், பலரும் உள்வாங்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை அதிகமாக உள்ள கிராம சேவகர் பிரிவுகள் உடைக்கப்பட வேண்டும். பிரதேச சபைகள், செயலகங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


