20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.
ஜப்பான் ஆசிய விளையாட்டு விழாவை நடத்தும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 1958இல் டோக்கியோவிலும் 1994இல் ஹிரோஷிமாவிலும் இவ்விழா நடத்தப்பட்டது.
விளையாட்டு விழாவின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் உட்பட முக்கிய தடகளப் போட்டிகள் நடைபெறும் முதன்மை விளையாட்டரங்கமாக 35,000 ஆசனத் திறன் கொண்ட ‘பலோமா மிசுஹோ’ (Paloma Mizuho) விளையாட்டரங்கம் பெயரிடப்பட்டுள்ளது.
இம்முறை விளையாட்டு விழாவில் 11,000க்கும் அதிகமான வீர வீராங்கனைகளும் சுமார் 6,000 அதிகாரிகளும் பங்கேற்பதுடன், அவர்கள் 43 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டி நிகழ்வுகளில் போட்டியிடவுள்ளனர்.
இம்முறை போட்டிகளில் Padel, Teqball, Surfing போன்ற விளையாட்டுகளுடன் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள Virtual Taekwondo போன்ற விளையாட்டுகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
