தொடரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்ற அதே நேரம் உயிர்ப் பலிகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.
தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணிகள் அதிகம் தாமதமாவதோடு உறவுகளிடம் தொடர்பில்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டி பன்விலை உலுகங்கை பிரதேசத்தில் நேற்றிரவு 27 மண் மேடு வீடொன்றில் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலியானதோடு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புசல்லாவை பகுதியில் இரட்டைப்பாதை சங்குவாரி மேற்பிரிவில் வீடொன்றின் மீது கற்பாறை வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்
இவர்கள் பாறைக்குள் அகப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் இரட்டைப்பாதை நகருக்கு அருகாமையிலுள்ள பிரதான வீதி பள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 27 கண்டி மாத்தளை மடவலை வத்தேகம போன்ற இடங்களுக்குச் சென்ற பொதுமக்கள் பலரும் வீதிகளின் பல இடங்களிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வத்தேகம பேருந்து நிலையத்திலேயே இரவுப் பொழுதை கழிக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளனர்
மேலும் பலர் பல கிலோமீற்றர் கால் நடையாக நடந்தும் சென்றனர்.
கண்டியில் இருந்து ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பாதை ஐந்தாம் கட்டை பகுதியில் முழுமையாக தாழ் இறங்கியுள்ளது.
கபரகல,மடுல்கலை,பம்பரல்லை,கோமரை,பெத்தேகமை,நக்கில்ஸ் போன்ற பகுதிகளிலுள்ள தோட்டப்புறங்களின் பல வீதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மக்கள் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரும் பீதியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
……………
