இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சாலையோரம் இன்று சனிக்கிழமை (ஜூன் 20) நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஏழு பேர் மாண்டனர்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
காவல்துறையினர் அதுபற்றித் தகவல் தந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
குண்டுவெடிப்புகளுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை. குற்றம் புரிந்தோரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
முதல் சம்பவத்தில் ஒரு வாகனம் குறிவைக்கப்பட்டது. கைபர் பக்துன்குவா மாநிலத்தின் பன்னு மாவட்டத்தில் மீட்புக் குழுவினர் பணியில் இருந்தபோது இரண்டாவது குண்டு வெடித்தது.
காவல்துறையின் மூத்த அதிகாரி யாசிர் அஃப்ரிடி அதனைத் தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில் ஐவரும் இரண்டாம் சம்பவத்தில் இருவரும் கொல்லப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகமும் பன்னுப் பிரிவின் ஆணையரும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. தாக்குதலைப் பாகிஸ்தானிய அதிபர் ஆசிஃப் அலி ஸர்தாரி, ‘எக்ஸ்’ தளத்தில் கண்டித்தார்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பான அடைக்கலம், தளவாட ஆதரவு, நிதியுதவி முதலியவற்றை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்வோருக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
