உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதன்படி ரவுண்ட் ஒவ் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஒவ் 16 சுற்றுக்குள் நுழையும்.
இந்நிலையில், ரவுண்ட் ஒவ் 32 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் 4 முறை சம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை பராகுவே எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன.
இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
கூடுதலாக வழக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இதில், 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஒவ் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. பராகுவேக்கு எதிராக தோல்வியடைந்த ஜெர்மனி நடப்பு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.
4 முறை உலக சம்பியனான ஜெர்மனி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகள் கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
