மலையக காந்தி என்று மக்களால் போற்றப்பட நாவலபிட்டி தொகுதியின் முதலாவதுபாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும்,இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது பொது செயலாளரும், புசல்லாவை சரஸ்வதி கல்லூரி யின் ஸ்தாபகருமான அமரர். கே.இராஜலிங்கத்தின் 63 வது நினைவு தினம்
11.02.2026 அன்று புசல்லாவை சங்குவாரித் தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் சமாதிக்கருகில் நடைபெறும்.
இதில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்,மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தொழிலுறவு அதிகாரிகளும் அன்னாரது குடும்ப உறுப்பினர்களும் சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களும் சிரேஷ்ட. தொழிற்சங்க பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிரேஷ்ட தொழிற்சங்கவாதி சிவசாமி வீரப்பன் நினைவு தின பேருரை ஆற்றவுள்ளார்.
அமரர் இராஜலிங்கம் அவர்களின் குடும்பத்தின் சார்பாக பெறா மகன் சி.ஜெயக்குமார் கலந்துகொள்ள்ளவுள்ளார்.
அமரர் இராஜலிங்கம் தனது 21 வயதில் தோட்டப் புற மக்களுக்காக புசல்லாவை பகுதியில் தமது தந்தையாருக்கு சொந்தமான 80 ஏக்கர் தேயிலை தோட்டத்தை விற்று சுமார் 40 பிள்ளைகளுடன் சரஸ்வதி கல்லூரியை ஆரம்பித்து வைத்தார்.
வாழ் நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த கே. இராஜலிங்கம் தமது சொத்து ,உடல் அனைத்தையும் மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்கும்,அரசியல் உரிமைகளுக்காகவும் தியாகம் செய்தவர்.
சிறந்த ஆங்கில புலமையும் ,கல்வி ஞானமும் கொண்ட அமரர் தனது இளமை கால கல்வியை கம்பளை புனித.அன்றூஸ் கல்லூரியிலும்,மேற் படிப்பை கண்டி புனித.அந்தனீஸ் கல்லூரியிலும் மேற் கொண்டவர்.
இவரின் ஆங்கில புலமையையும்,கல்வி அறிவையும் கண்ணுற்ற அந்தனீஸ் கல்லூரி நிர்வாகம் இவரை அக்கல்லூரியின் தமிழ் ஆசானாக நியமனம் செய்தது.
ஆனால் அவரின் எண்ணம் முழுவதும் மலையக பாட்டாளி மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதிலும் அக்கல்வியின் மூலம் அடிமையாக வாழும் தம்மக்களின் உரிமைகளை ஈட்டுக்கொடுப்பதிலுமே சதா காலமும் சிந்தித்துப் வண்ணம் இருந்தது.
இதன் விளைவே இன்று புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி தலை நிமிர்ந்து நிற்கிறது. அதற்கான முழு உழைப்பையும் தமது குடும்ப சொத்துகளை விற்றுதான் நடாத்திச்சென்றார்.
சுதந்திர இலங்கை நாட்டின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டார். சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் ஆசிய பிராந்திய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜலிங்கம் அவர்கள் தொழிலாளர்களின் உரிமைக்காக ஜெனீவா ILO மாநாட்டில் பல முறை தமது குரலை ஒலிக்க செய்தவர்.
பாரத நாட்டின் அரசியல் யாப்பின் பிதா என்று போற்றப்படும் டாக்டர். அம்பேத்கார்,ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு,இந்திய தேச பிதா மாகாத்மா காந்தி போன்ற சர்வதேச தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் உரிமைகளுக்காக நீண்ட மகஜர் ஒன்றை சமர்ப்பித்து இந்திய பேரரசின் கவனத்தை திசை திருப்பியதின் பயனாக நேரு அவர்களின் இலங்கை விஜயத்திற்கு அடித்தளமிட்டார்.
அத்தோடு நேரு அவர்களின் ஆங்கில சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்த்தார். 1963 ஆம் ஆண்டு 11 ம் திகதி அமரரின் ஆத்மா இப்பூவலகிற்கு விடை கொடுத்து நிரந்தரமாக துயில் கொண்டது.
1932 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய தூதுவர் மேதகு.K.B.S.மேனன் அவர்களின் உதவியுடன் சரஸ்வதி கல்லூரியை ஸ்தாபனம் செய்து இந்திய தூதுவரின் பாரியார் சரஸ்வதி மேனன் அவர்களின் பெயரையே ப்பாடசாலைக்கு சூட்டினார்.
இந்த தூர நோக்கம் கொண்ட எண்ணம் இன்று சரஸ்வதி கல்லூரியின் அபிவிருத்திக்கு இந்திய அரசு சுமார் 9 கோடி நிதி உதவியை வழங்கியது. ஆரம்ப காலங்களில் தமது குடும்ப சொத்துகளை அனைத்தையும் விற்ற அமரர் இராஜலிங்கம் அவர்கள் இறுதியில் பாடசாலைக்கு நிலம் ஒன்று வாங்குவதற்காக தம்மால் உருவாக்க ப்பட்ட தொழில் சங்கத்தின் தலைமை பதவியையும் விட்டுக் கொடுத்தார்.
மலையக பிள்ளைகளுக்கு கல்விக்கு வித்திட்டவர்.இவரின் தியாக சிந்தனயை போற்றும் நோக்கமாக இந்திய நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1950 ஆண்டு அமரருக்கு மலையக காந்தி என்றும், தீணர்களின் தொண்டர் என்றும் புகழாரம் சூட்டி தமது கல்கி இதழின் அட்டைபடமாக வெளீயீடு செய்து பெருமை படுத்தினார்.
அமரர் இராஜலிங்கம் போன்ற தன்னலமற்ற தியாக புருஷராக மலையக மண்ணில் நிலைக்கிறார்.
ம.நவநீதன்
