கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் வீழ்ந்தவர் தலை நசிந்து பலியான சம்பவம் மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் தொழிற்சாலை இயந்திர சில்லில் சிக்குண்டு மரணமான சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்துள்ளது.
மஸ்கெலியா பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்திலேயே இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
சம்பவத்தில் மரணமான தொழிலாளி மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த விஜயகுமார் (50 வயது) நான்கு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
நேற்று இரவு 11.00மணியளவில் கொழுந்து அரைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சரியாக அதிகாலை 1.30 மணியளவில் இயந்திர சில்லில் பணி புரிந்த தொழிலாளியின் ஆடை (சுவிட்டர்) இயந்திரத்தில் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் வந்தவுடன் பிரேதம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
