கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று (பிப். 24) ஒப்புதல் அளித்துள்ளது.
பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3-ன் படி, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள மாநில சட்டப்பேரவையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் மற்றொரு தீர்மானம், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
