இளநீரால் ஆரோக்கியத்துடன் பொருளாதாரமும் வளரும் என்று பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக 500 தேயிலை கிராமங்கள் வேலைத்திட்டம்,. பனை அபிவிருத்தி திட்டங்கள் என்பன வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்னை முக்கோண அபிவிருத்தியைப் போலவே இளநீர் கிராமம் -250 செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.


பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தின,பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நேற்று (02.09.2026) குருநாகல்-மஹாயாயா பிரதேசத்தில் Ceylon King Coconut Villages-250 தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இளநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.
பொருளாதாரத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தவே நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். என்றார்.
இதற்கமைய, “2026ஆம் ஆண்டில் 75 கிராமங்களும், 2027ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன.
இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “உலகில் சிறந்த குடிபானங்களில் ஒன்றாக இளநீர் காணப்படுகிறது. இரசாயனங்கள் கலந்த இறக்குமதி செய்யப்படும் குடிபானங்களை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அருந்துவதால் பல்வேறு சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இளநீரை ஊக்குவிப்பதன் மூலம் எமது உடல் ஆரோக்கியத்துடன் நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்திற்கும் பங்களிக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
