நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 இடைத்தங்கல் முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.
அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 முகாம்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 முகாம்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.
இதேவேளை, இந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
2-3 மாதங்களுக்குள் அக்குடும்பங்களை மீள்குடியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
