அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் நேற்று (06) இரவு இட்ட பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரிகளால், ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இவ்வாறு அமெரிக்காவிற்கு வழங்கப்படவுள்ளதாக டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்றும், வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கப்பல்களில் சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் பீப்பாய்களை நேரடியாக அமெரிக்கத் துறைமுகங்களுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
