பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் மலையகத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரங்கள் மேகொள்ளப்படவுள்ளதாக “சமுக நல்வழி மன்றத்தின்” பணிப்பாளர் திருமதி சந்திரமதி கலியபெருமாள் தெரிவித்தார்.
“பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழிப்போம்” என்னும் தொனிப் பொருளில் நவம்பர் 25முதல் டிசம்பர் 10 வரை 16 நாட்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள வேலைத் திட்டத்துக்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்த விளக்கமளிக்கும் ஊடவியலாளர் மாநாடு சனிக்கிழமை குடாஓயா மகாராஜா கிரேண்ட் விருந்தகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எமது மன்றம் அரசியல், பொருளாதார, கல்வி, சுகாதாரம் உட்பட பெண்கள் மத்தியில் அறியாமையைப் போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பெண்கள் அமைப்போடு இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
சமுகத்தின் வளர்ச்சியிலும் குடும்பத்தின் பொறுப்பிலும் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. அத்தகயை பெண்கள் வீடுகள், வேலைத் தளங்கள், பொது இடங்கள், வர்த்க் நிலையங்கள் போன்றவற்றில் பல்வேறு வன்முறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை வெளியிற் சொல்லத் தயங்குகின்றார்கள். வன்முறை தொடர்பான தகவல்களை வழங்கி, தம்மையும் சமுகத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய தகுந்த இடம் இன்னமும் அமையவில்ல. அடுக்கு முறையும் ஒடுக்கு முறையும் நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பெண்களுக்கு அநீதிகள் ஏற்படும் போது அவற்றை செய்திகளாக அறிக்கையிடுவது மட்டும் ஊடகங்களின் கடமையாக இருக்கக் கூடாது. சமுக சீர்கேடுகளைத் தடுப்பதற்கு பங்களிப்பு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
எனவே, உலகளாவிய ரீதியிலான ஐ.நா. பிரகடனத்திற்கமைய எமது மன்றம் மலையகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளும் வேலைத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைக்க முன்வருமாறு சகல ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் டிஜிட்டல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதில் சிறியோர் முதல் பெரியோர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். குற்றங்கள் நேராமல் தடுக்கப்பட வேண்டும்.
குற்றவாளிகள் இனங்கண்டு தண்டிக்கப்பட வேண்டும். சமுக அவலங்களை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பை உணர்ந்து சுட்டிக் காட்ட வேண்டிய கடமை ஊடகங்களிடம் உள்ளது.
நாம் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நீரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு நின்று விடாமல், நுவரெலியா மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தோடு பிரசாரங்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றார்
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


