மலையகக் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை நல்கியவரும் கண்டி கல்வி வலய தமிழ்க் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான செ. தமிழ்ச்செல்வன் தமது 40 ஆண்டு கால சேவைப்பூர்த்தி செய்து 20.11.2025 அன்றுடன் தமது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், சமய சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர் 25.05.1986 ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரிய நியமனத்திற்காக 1985 ஆம் ஆண்டு பயிலுனராக இணைத்துக்கொள்ளப்பட்டார்.
1986 ஆம் ஆண்டில் பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு கண்டி கலஹா டுனாலி தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் புசல்லாவை க/ நயபனை தமிழ் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராக மீண்டும் புசல்லாவை நயாபான தமிழ் வித்தியாலயத்திற்கே வந்து சேவையாற்றினார்.
பின்னர் அதே பாடசாலையில் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். ஆரம்பப் பாடசாலையாக இருந்த அப்பாடசாலையை சாதாரணதரம் வரை தரம் உயர்த்தினார்.
கல்விப் புலம் சார்ந்த நண்பர்களை இணைத்துக்கொண்டு புசல்லாவை பிரதேச கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு முற்போக்கான கல்வி கலாசார சமூக முன்னேற்றப் பணிகளை தமது மென்மையான அணுகுமுறையுடனும் உத்வேகத்துடனும் மேற்கொண்டார்.
அங்கிருந்து 1996 ஆம் ஆண்டு புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அதிபராக நியமனம் பெற்றுச் சென்றார். சரஸ்வதி கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கும் அயராது பாடுபட்டு உழைத்தார்.
கல்விச் சமூகத்தின் மற்றுமொரு அழைப்பை மறுக்காத இவர் கலஹா இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் அதிபராக 2002 ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். 2006 ஆம் ஆண்டு கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக கண்டி கல்விப் பணிமனையில் சேவையாற்றி வரும் இவர் கணித பாட அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியுள்ளார். கண்டி கல்வி வலயத்தின் பெறுபேற்றினை உயர்த்தும் பல செயல் திட்டங்களை முன்னெடுக்கும் இவர் அதிபர்,ஆசிரியர் பயிற்சி நெறிகளில் வளவாளராகவும் பணியாற்றுகின்றார்.
இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் தேயாத முழு நிலவு, அணையாத தீபங்கள் என இரு நாவல்களையும் புதிய ஏற்பாடு, இன்பசுமங்கலி, தேவதையைக் கண்டேன் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், அம்மன் பஜனைப் பாடல் என்ற நூலையும் இலக்கிய உலகிற்கு தந்துள்ளார்.
இதற்காக மத்திய மாகாண இலக்கிய சாகித்திய விருதினையும் பெற்றுக் கொண்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமாதான நீதவானான இவர் சமயத் தொண்டரும் ஆவார். நாவலப்பிட்டி இந்து மன்றத்தின் உப தலைவரும் அகில இலங்கை இந்துமன்ற உறுப்பினரும் ஆவார் .
சிறந்த சொற்பொழிவாளரான இவர் மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சமயச் சொற்பொழிவாற்றும் சிறந்த பேச்சு வன்மையையும். தன்வசம் பெற்றவராவார்.
மேலும் இந்து கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் பயிற்சிக்கருத்தரங்குகளில் வளவாளராகவும் கடமையாற்றுகின்றார்.
கல்விப் புலத்திலிருந்து ஓய்வு பெறும் இவரது நோய் நொடிகளற்ற ஆயுள் நீட்சிக்கு மலையக கல்விச் சமூகம் மனமார்ந்த நல் வாழ்த்துக்களையும் நீண்ட கால சேவைக்கு நன்றிகளையும் காணிக்கையாக்குகிறது.
பன்விலை ம. நவநீதன்


