தொலைத்தொடர்பு வடங்களுக்கு உலை வைத்த இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் தொலைத்தொடர்புக் கம்பி வடங்களை (கேபிள்களை) வெட்டி செம்புக் கம்பிகளைத் திருடியதாகக் கூறப்படும் இருவர் (நேற்று 23) கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து மாதங்களில் ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, செம்புக் கம்பிகள், கேபிள்கள்,வெட்டுக் கத்திகள் உள்ளிட்டவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்புக் கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செம்புக் கம்பிகளை அகற்றி திருடும் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.


நுவரெலியா மேல்குளம் வீதி மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சுமார் ஐந்து மாதங்களாக இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இணைப்புக் கேபிள்களை வெட்டி செம்புக் கம்பிகளைத் திருடிய சம்பவங்கள் தொடர்பாக ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், கேபிள்களில் இருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று கிலோகிராம் செம்புக் கம்பிகள், செம்பு அல்லாத 344 அடி நீளமான கம்பிகள், செம்புக் கம்பிகள் அகற்றப்பட்டிருந்த ரப்பர் உறைகளின் தொகுதி மற்றும் கம்பிகளை வெட்டுவதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கந்தப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பழனியப்பன் தங்கராஜ் (40) மற்றும் ஹாலிஎல பிரதேசத்திலிருந்து தினக்கூலி வேலைக்காக நுவரெலியாவுக்கு வந்து, ஹாவாஎலிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த ராமநாதன் மாதவன் (30) ஆகிய இருவராவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இணைப்புக் கேபிள்களை வெட்டி அதிலுள்ள செம்புக் கம்பிகளை அகற்றுவது வெறுமனே சொத்துத் திருட்டாக மாத்திரம் கருதப்பட முடியாததுடன், இதன் காரணமாக பொதுமக்களின் தொலைத்தொடர்பு சேவைகள் தடைபடுதல், நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்படுதல் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுதல் போன்ற நிலைமைகளும் உருவாகக்கூடும் என்பது சட்ட ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், மற்றொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமான சொத்துக்கு சேதம் விளைவித்து அதன் பெறுமதி அல்லது பயன்பாட்டைக் குறைப்பது “Mischief” எனப்படும் குற்றத்திற்குள் உள்ளடங்கக்கூடும்.
எவ்வாறாயினும், இவ்வாறான குற்றம் தொடர்பான பொறுப்பு விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை, இச்சம்பவத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் செம்புக் கம்பிகள் மற்றும் ஏனைய பொருட்களின் பெறுமதி, அவற்றை வெட்டி அகற்றியதன் மூலம் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட செம்பு மற்றும் செம்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பித்த பின்னர், அவற்றின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க மற்றும் நுவரெலியா தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமிந்த சஞ்சீவ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் தலைமையில், பொலிஸ் சார்ஜன்ட்கள் 46031 சுரவீர, 8093 தென்னகோன், 33176 ஹேரத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி 89967 தேவதாஸ் ஆகிய அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (24) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் புத்திகா தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹெல்
