உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.
உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், வணிகா்கள் உள்பட பலா் வழக்கு தொடுத்தனா்.
இந்த வழக்கு விசாரணையின்போது அமெரிக்காவில் அவசர காலங்களில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த 1977-ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டம் அதிபருக்கு அதிகாரமளித்துள்ளதாகவும், அதில் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று வழக்கு தொடுத்தவா்கள் வாதிட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘ வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ என்று தீா்ப்பளித்தனா்.
3 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு: அதேவேளையில், அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். அவா்களின் தீா்ப்பில், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவாா்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான்’ என்று தெரிவித்தனா்.
இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.
