கட்டுநாயக்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 13பேர் சபரிமலை சென்றனர்!
சபரிமலை அழைத்துச் செல்வதாகபலாங்கொடையிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 யாத்திரிகர்களுள் 13 பேர் விமான டிக்கட் பெற்றுக்கொடுத்து சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் இலங்கை பிரதம குருவின் சிஷ்ய சாமிகள் தலையிட்டு நேற்று (09) 13 சாமிகளை சபரிமலை அனுப்பிவைத்ததாக அந்த ஆலயத்தைச் சேர்ந்த சிஷ்ய சாமி ஒருவர் மலைக்குருவிக்கு உறுதிப்படுத்தினார்.
விமான டிக்கட் இல்லை என்று ஏஜன்ஸிக்காரர் கையை விரித்ததால் பக்தர்கள் கட்டுநாயக்க பன்சலையில் நான்கு நாள்களாகத் தங்கியிருப்பதாக மலைக்குருவி செய்தி வெளியிட்டிருந்தது.
பலாங்கொடையிலிருந்து 26 பக்தர்களை சபரிமலை யாத்திரைக்கென பஸ் ஒன்றில் அழைத்து வந்த குருசாமி ஒருவர், விமான நிலையம் வந்ததும் தனக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று தெரித்துள்ளார்.
இவ்வாறு கடந்த ஆறாந்திகதி கட்டுநாயக்க விமான நிலையம் அழைத்துவரப்பட்டவர்கள் கடந்த நான்கு நாள்களாக கட்டுநாயக்கவில் உள்ள பன்சலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த ஐயப்ப ஆலய சாமிகள் தலையிட்டு அந்த பக்தர்களை அழைத்து வந்த பலாங்கொடை குருசாமியைச் சந்தித்துக் கேட்டபோது பணம் வாங்கிக்கொண்டு விமான டிக்கட் பெற்றுக்கொடுக்கவில்லை என்பது தெரியவந்ததாக இலங்கை பிரதம குருவின் சிஷ்ய சாமிகளில் ஓருவரான சுரேஷ் சாமி மலைக்குருவிக்குத் தெரிவித்தார்.
பின்னர் 13 சாமிகளுக்கு டிக்கட் பெற்றுக்கொடுத்து அவர்களை நேற்று மாலை (09) சபரிமலை அனுப்பி வைத்ததாகவும் எஞ்சிய 13 பேர் தொடர்ந்தும் பன்சலையில் தங்கியிருப்பதாகவும் சுரேஷ் சாமி தெரிவித்தார்.
அவர்களையும் சபரிமலை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். சபரிமலை செல்லும் பக்தர்கள் விமான டிக்கட் கையில் கிடைக்காமல் விமான நிலையம் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐயப்ப ஆலயத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.
ஐயப்ப யாத்திரையை அரசாங்கம் அண்மையில் புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்தது. அதனால், கூடுதலான பக்தர்கள் இம்முறை யாத்திரை செல்ல முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
10-01-2026
