உயர் தரப் பரீட்சை இன்றும் நாளையும் நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை, அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (நவம்பர் 27), நாளைய தினம் (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்தார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது
