உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பிள்ளையை ஆற்றுக்கு அழைத்துச் சென்றது யார்?
இதுவரை நான்கு சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லும் ஊர் மக்கள், இது நிச்சயமாகப் பிசாசின் சேட்டையாக இருக்கலாம் என்று பதை பதைக்கிறார்கள்!
நத்தார் பண்டிகையைக் கொண்டாட முழு உலகமும் தயாராகிக்கொண்டிருந்ததைப் போலவே இரத்தினபுரி வேவல்வத்தை தோட்டத்தின் வெல்லவல திக்குமுக்குலா பிரிவு மக்களும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தன் ஒன்றரை வயது பிள்ளையை உறங்கவைத்துவிட்டு மதிய உணவு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் இந்தக் குழந்தையின் தாயார்.
உணவு தயாரித்து முடித்துவிட்டுப்போய் பிள்ளையைப் பார்த்தால் காணவில்லை. பதறியடித்துக்கொண்டு தேடினார். அப்போது வீட்டுக்குப் பின்புறமாக ஓடும் ஒரு சிற்றாற்றில் குழந்தையொன்று கிடப்பதாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் சொல்கிறார்!
ஆமாம்..அது அந்தப் பிள்ளைதான். நீரில் மூழ்கி இறந்துகிடப்பதை உறுதி செய்கிறார்கள் ஊர்மக்கள்.
இது எப்படி நடந்தது? உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எப்படி ஆற்றுக்குச் சென்றது? இது நிச்சயம் ஏதோ திருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று முழு ஊரே சந்தேகப்படுகிறது.சில காலத்திற்கு முன்பு இளம் கர்ப்பிணித் தாய் ஒருவர் அந்த ஆற்றுப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். அதற்குப் பின்னர் நான்கு பிள்ளைகள் இப்படி மர்மமாக இறந்துபோனதை நினைத்துப் பார்க்கிறது ஊர்ச் சனம்.
இந்தப் பிள்ளையும் உறக்கத்திலிருந்து எழுந்து நடந்து சென்று யாருடனோ உரையாடுகிறது. இது அயல் வீட்டிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தக் குழந்தை உரையாடியது யாருடன்? அங்கு எந்த ஆளரவமும் இல்லையே.ஒரு வெள்ளைச் சேலைத் துணி மட்டும் காற்றில் அசைந்தாடுகிறது. அதனுடன்தான் அந்தப் பிள்ளை உரையாடுகிறதா? இது இறந்துபோன அந்த இளம் கர்ப்பிணித்தாயாக இருக்க வேண்டும் என்று பழைமை பேசுகிறது ஊர்.
இது மூட நம்பிக்கையா முட்டாள்தனமா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இன்னமும் அறிவியலும் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இதேபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் கொட்டகலை பகுதியிலும் நடந்திருக்கிறது. திருமண வீடு ஒன்றுக்குச் செல்வதற்காக வீட்டார் தயாராகிக் கொண்டிருந்தபோது பிள்ளையொன்று வீட்டோர ஆற்றில் வீழ்ந்து இறந்துபோனது. அது முற்றிலும் வீட்டாரின் கவனவீனம் என்று சொல்லப்பட்டது. ஆனால். வேவல்வத்தை திக்குமுக்குலா தோட்டத்தை திக்குமுக்காடச் செய்திருக்கும் குழந்தையின் மரணம் உண்மையைத் துலங்கச் செய்யுமா? என்பதே கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
