ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம் வருட தொழில்நுட்ப கல்விக்கு பொறுப்பாக செயற்பட்ட ஆசிரியர் சிவநேசன் சந்திரமோகன் 08.12.2025 அன்றுடன் தமது அரச சேவையினை நிறைவு செய்து கொள்கின்றார்.
புசல்லாவை மெல்போர்ட் தமிழ் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக தமது பணியை ஆரம்பித்த இவர் புசல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் கம்பளை ஆசிரியர் வள மத்திய நிலைய விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியர்களுக்கான இணைப்பாளராகவும் பணியாற்றிய காலத்தில் அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் பிரதி அதிபராக நியமனம் பெற்றார்.
பின்னர் அதே கல்லூரியில் அதிபராக சேவையாற்றியுள்ளார். சிறந்த கல்விப் பின்புலத்தைக் கொண்ட இவர் கலைமாணி, கல்வி முதுமாணி, பட்டப்பின் தொழில்நுட்ப தொடர்பாடல் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் பட்டப் பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை தேசிய கல்வி நிறுவனத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக அரசியல் முதுமாணி பட்டத்தை பெற்ற இவர் க. பொ. த உயர்தர பரீட்சைகள் அரசறிவியல் பாட மதிப்பீட்டுக் குழு மேலதிக பிரதம பரீட்சகராகவும் பல்வேறு மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கல்வி சமுக ஆய்வாளரான இவர் பல்வேறு ஆய்வு பணிகளில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.
கம்பளை கல்வி பணிமனையில் ஆய்வு நுட்பங்கள் தொடர்பான செயலமர்வுகளை நடாத்துவதிலும். ஈடுபட்டுள்ளார்.
மத்திய மாகாண கணினி வன்பொருள் தொழில்நுட்ப குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டார். புசல்லாவையில் கல்வி உயர்கல்வி நிலையத்தை நிறுவி பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக்கொண்டு GAQ வகுப்புகளை நடாத்தி ஆசிரியர்களை பட்டதாரிகளாக்கும் பணியையும் செய்தார்.
பாடசாலை காலத்தில் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் ஓவியராகவும் கவிஞராகவும் நடிகராகவும் திகழ்ந்து ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
இவரிடம் கற்ற மாணவர்கள் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு தொழில் முயற்சியாளர்களாகவும் உள்ளனர்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்


