வெனிசுலாவில் இடைக்கால ஆட்சியமைத்து அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் புதிய ஆட்சி அமையும் வரை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். அந்நாட்டு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வெனிசுவேலா தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் சனி்க்கிழமை (ஜனவரி 3) கைதுசெய்தது.
இருவரும் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் தேசிய காவலர் தளத்தில் இறக்கப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, கைகளும் கண்களும் கட்டப்பட்டு, காதுகள் மூடப்பட்ட நிலையில் உள்ள மதுரோவின் புகைப்படத்தை டிரம்ப் பகிர்ந்தார்
“பாதுகாப்பான, முறையான, நியாயமான மாற்றத்தை செய்யும்வரையில் அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்” என்று திரு டிரம்ப் ஃபுளோரிடாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“வெனிசுலேலாவின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத வேறு எவராவது அந்நாட்டைக் கைப்பற்றி அமெரிக்க அனுமதிக்க முடியாது,” என்றார் அவர்.
வெனிசுவேலாவை நிர்வகிப்பது குறித்த டிரம்பின் திட்டம் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், திரு மதுரோ அரசாங்கம் இன்னும் பொறுப்பில் இருப்பதுடன், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எண்ணமும் அதற்கு இல்லை.
அமெரிக்காவால் சட்டவிரோத போதைப் பொருள் பயங்கரவாதம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள திரு மதுரோ, ஜனவரி 5ஆம் தேதி மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொக்ஹைன் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவியும் எதிர்நோக்குகிறார்.
திரு மதுரோ புரூக்லினில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

திரு மதுரோவின் வாரிசான வெனிசுவாலாத் துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், சனிக்கிழமை பிற்பகல் அந்நாட்டுத் தொலைக்காட்சியில் மற்ற உயர் அதிகாரிகளுடன் தோன்றி, “மதுராவே வெனிசுலேவாவின் ஒரே தலைவர்,” என்று குரல் எழுப்பினார். மதுராவையும் அவரது மனைவியையும் உடனிடயாக விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை குறித்து “பெரும் அச்சமடைந்துள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அச்செயல் அவ்வட்டாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார் அவர்.
ஐநா பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மகிழ்ச்சியில் புலம்பெயர்ந்த மக்கள்
மதுரோ கைது செய்யப்பட்டதை அடுத்து உலகெங்கும் இடம்பெயர்ந்துள்ள வெனிசுலாலவே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மைய வரலாற்றில் உலகில் அதிகளவில் புலம்பெயர்ந்த மக்களாக அவர்கள் உள்ளனர்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். சர்வாதிகாரம் வீழ்ந்தது, எங்களுக்கு இப்போது சுதந்திரமான நாடு உள்ளதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று சாண்டியாகோவில் உள்ள வெனிசுலாவே நாட்டின் திருவாட்டி காட்டி யானெஸ் கூறினார். அவர் கடந்த ஏழு ஆண்டுகளை சிலி நாட்டில் கழித்துள்ளார்.
வெனிசுவேலாவில் சனிக்கிழமை தெருக்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்தன. படையினர் சில பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கராகாஸில் சிறிய அளவிலான மதுரோ ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.
மற்றவர்கள் நிம்மதியை வெளிப்படுத்தினர். “எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு திரைப்படம் போல இருந்ததால் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் ஐயமாக இருந்தது,” என்று மராகே நகரில் 37 வயதான வணிகர் கரோலினா பிமெண்டல் கூறினார். “தற்போது அமைதியாக இருக்கிறது, ஆனால் எந்த நேரத்திலும் அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
அமெரிக்கா எவ்வாறு வெனிசுவேலாவைப் பொறுப்பேற்று நடத்தும் என்பது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு டிரம்ப் பதிலளிக்கவில்லை.
“மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ, தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் போன்றவர்கள் அந்நாட்டை நிர்வகிப்பார்கள் என்று திரு டிரம்ப் கூறினார்.
“எனது உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுவேலா தலைநகரில் மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டனர். முப்படைகளும் சேர்ந்து பெரியளவிலான தாக்குதலில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது.
“சட்டவிரோதி சர்வாதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் வலிமையை பிரமிக்க வைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது இது,” என்றார் டிரம்ப்.
டிரம்பின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, அது “வரலாற்று சிறப்புமிக்கதும் துணிச்சலானதும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும், அனைத்துலகச் சட்டங்களுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக நியூயோர்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார். டிரம்ப் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அவரை அழைத்து தமது எதிர்ப்பை தெரிவித்ததாக அவர் சொன்னார்.
