கண்டி, பன்விலை- நெல்லிமலை பாலத்தைப் பாடசாலை ஆரம்பிக்குமுன்னர் சீர்படுத்தித் தருமாறு அந்தப் பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்கள்!
பன்விலையிலிருந்து நெல்லிமலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்தது.
பன்விலை நகரிலிருந்து 17 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் நெல்லிமலை தோட்ட அரச பிரிவு மற்றும் ஹுலாங்கந்தை தோட்டத்திற்கு செல்லும் பாதையிலுள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் நூற்றுக் கணக்கான மக்கள் போக்குவரத்து வசதிகளின்றி பெரிதும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பாடசாலைகளை எதிர் வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்தாலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் நெல்லிமலை தோட்ட மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பாலமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்

