நாட்டில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் உணரபப்ட வேண்டும். அதை வலியுறுத்தி மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக செயல் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை வரவேற்கத் தக்கது என சபையின் உபதலைவர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் போதைப் பொருள் பாவனையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதோடு மக்கள் மத்தியில் மனித விழுமியங்கள் கேள்விக் குறியாகி வருகின்றது. போதைப் பொருள் மாபியா கும்பலை ஒழிக்க ஜனாதிபதி எடுத்துள்ள துணிகரமான நடவடிக்கையை பெரிதும் வரவேற்கிறோம்.
அதேநேரம், போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லவும் சகல மதங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை கட்டாயம் நடத்துவதற்கு மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துளேன்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து அனைவருக்கும் சமமாக இலவசக் கல்வியை வழங்குவதற்கும், பாடப் புத்தகங்கள், மற்றும் சீருடைகளை விநியோகிப்பதற்கும் அரசாங்கம் பெருமளவு நிதியை வருடந்தோறும் செலவிட்டு வருகின்றது.
எனவே மாணவர்கள் மத்தியில் நற்பண்புகள், நல்லொழுக்கம், குடும்பம், சமுகம் மற்றும் இயற்கையுடன் இயைந்து வாழும் மனப்பாங்கு, அன்பு, கருணை, மனிதாபிமானம் போன்றவை உணரப்பட வேண்டியது அவசியமாகும். இவற்றை அறநெறிக் கல்வி போதிக்கின்றது.
மாணவர்கள் தங்கள் பெற்றோரையும் அயலவர்களையும் மதிக்கவும், அன்றாடம் எதிர்நோக்கும் சவால்களை தைரியமாக வென்றெடுக்கவும், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சமாதானம், விட்டுக் கொடுப்பு போன்றவற்றின் ஊடாக சிறந்த சமுகத்தை உருவாக்கவும் அறநெறிக் கல்வி முக்கிய பங்கை வகிக்கின்றது.
இன்றைய கால கட்டத்தில் பாடசாலை மாணவர்கள் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும், பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட சமுக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, பாடசாலைக் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அறநெறிக் கல்விக்கும் தரப்படும் போது, நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏற்ற நற்பிரஜைகளை உருவாக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நகரங்களிலும் கிராமங்கள், தோட்டப் பகுதிகளிலும் அறநெறிப் பாடசாலைகள் பெருமளவு இல்லாது விட்டாலும் இன்று அறநெறிக் கல்வி ஒவ்வொரு பிரஜைக்கும் தேவை என்பது பரவலாக உணரப்பட்டு வருகின்றது.
மேற்படி விடயங்களை வலியுறுத்தி ஜனாதிபதி, கல்வியமைச்சரான பிரதமர், மத்திய மாகாண ஆளுநர், செயலாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு, பிரதேச செயலகம், அட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமுக நலன் கருதிய இத்திட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
