ஆடி மாதம் முதலாந்திகதி இன்று: மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது.
ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும்.
தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது.
மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது.
ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்.
ஆடிமாதம் ஒரு மாதமும் சுப காரியங்கள் யாவும் விலக்கப்பட்டு சமய விரதங்கள், விழாக்கள் போன்றவற்றை நடாத்தும் ஆன்மீக மாதமாக கொண்டாடுகின்றனர்.
ஆடிமாதம் அம்மனுக்கு விசேட மாதமாகக் கருதப்படுகின்றது. அம்மன் ஆலயங்களில் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபடுவர்.
அம்மனுக்கு எலுமிச்சம் காய் மாலை, வேப்பிலை மாலை சாற்றியும் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றியும் வழிபடுவர்.
வீடுகளிலும் மஞ்சள் நீர் தெளித்து தூய்மைப்படுத்தி அம்மன் தங்கள் இல்லங்கள் வருவதுபோல் மகிழ்ச்சியாக இருப்பர்.
ஆடிக்கூழ் குடிப்பதற்கு அம்மன் தேடி வருவதாக ஒரு ஜதீகம்.
அம்மனின் அவதார நாளாகவும் அம்மன் பூப்பெய்த நாளாகவும் ‘ஆடித்தபசு’ அம்மன் விரதம் இருந்த நாளாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமன்றி பிதிர்களும் ஆடிமாதம் பூலோகம் வருவதாக கூறுவார்கள். ஆடி அமாவாசை பிதிர் செய்யும் நாளாகவும் கூறப்படுகிறது.
பிதிர்களுக்கு விரதம் இருந்து சிறந்த அவர்களின் ஆத்மாவிற்கு உணவு படைத்து காகத்திற்கு வெளியில் உணவு படைத்து மற்றவர்களுக்கும் தானம் கொடுத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்.
இவ்வாறு ஆடிமாதம் பல சிறப்புக்கள் நிறைந்த மாதமாக அமைகின்றது.
ஆடிப்பிறப்பு
ஆடிப்பிறப்பு என்பது மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பண்டிகை ஆகும். மற்றைய மாதங்களை விட ஆடிப்பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாக தமிழர் கொண்டாடுகிறார்கள்.
இது தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
ஆடிப்பிறப்பு எமது தாயகமாகிய ஈழத்திலும் தமிழகத்திலும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
எமது தாயகத்தில் ஆடிப்பிறப்பென்றால் கூழும் கொழுக்கட்டையும் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆடிப்பிறப்பு சிறுவர்களும் முதியவர்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.
தெட்சணாயன காலத்தின் ஆரம்ப தினம் ஆடிமாதம் முதல் நாளாகும். இக்காலம் கோடைக்காலம் வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக பெருகும்.
ஆடிக்கூழ்-கொழுக்கட்டை
ஆடிப்பிறப்பு அன்று வீடுகளில் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை அவித்து எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கம் இன்றும் தாயகத்தில் உள்ளது.
தைப்பொங்கல் தைமாதத்தின் சிறப்புப்போல் ஆடிப்பிறப்பு ஆடிமாதத்தின் சிறப்பாகும்.
முற்காலத்தில் சூரியனை இயற்கையாக வழிபட்டனர்.
சூரியனை வழிபடும் சமயம் ‘சௌரம்’ என்று அழைக்கப்பட்டது. சூரிய பகவானை ஆடிமாதத்திலும் வழிபாடு செய்து கொண்டாடுவது புண்ணிய தினமாகும்.
இதனை உணராமல் ஆடிப்பிறப்பை மக்கள் கொண்டாடாமல் விடுகின்றனர். தை மாத்தில் பொங்கல் பொங்குவது போல ஆடி மாதத்தில் கூழ் முக்கியத்துவம் பெறுகிறது.
ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் சாதாரணமாக ஒடியல் மாவில் கூழ் காய்ச்சி குடிப்பார்கள்.
ஆனால் ஆடிப்பிறப்பன்று அரிசி மாவில் கூழ்க்காய்ச்சி குடிப்பார்கள். கூழுக்கு அரிசிமா, பயறு, பனங்கட்டி, தோங்காய்ப்பால், வெல்லம், என்பனவற்றை சேர்த்து கூழ் காய்ச்சுவர்.
ஆடிப்பிறப்பு அன்று இந்த இனிப்புக்கூழ் காய்ச்சுவதால் ‘ஆடிக்கூழ்’ என்ற சிறப்புப்பெயரை பெறுகிறது.
அன்று கூழ் மட்டுமல்ல கொழுக்கட்டையும் அவிப்பர்.
வீட்டில் சுவாமி அறையில் நிறைகுடம் வைத்து வெற்றிலை, பாக்கு, முக்கனி, படைத்து தூபதீபம் காட்டி வழிபடுவர்.
பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் கூடியிருந்து கூழ்குடிக்கும் நிகழ்வு குடும்ப உறவுகள் சேர்ந்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்.
கூழ் குடிப்பதற்கு பலாவிலை எடுத்து அதைக்கோலி அதற்குள் கூழை ஊற்றிக்குடிப்பார்கள். கொழுக்கட்டையும் சேர்த்து உண்டு மகிழ்வர்.
குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம். இனிப்புக்கூழ் அலாதி பிரியமுள்ளதாக இருக்கும்.
மாலை நேரத்தில் இறந்த மூதாதையருக்கும் இவற்றைப் படைத்து அவர்களும் வந்து உண்ணுவதாக நினைத்து மகிழ்வர்.