200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? முட்டாள் அரசியல்!

200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா?

இந்தியாவிலிருந்து பிழைப்பு தேடி இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்குத் தமிழர்கள் வந்து 200 வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்பவர்களிடம், 200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படியோர் அரசியல் செய்வார்களாயின் அது முட்டாள்தனமாக அரசியல் இல்லையா? என்றும் கேட்கத் தோன்றவில்லையா?

மேற்கத்தேய நாடுகளில் ஐந்து வருடம் குடியிருந்தால், குடியுரிமை வழங்குகிறார்கள். இங்குக் காணிச் சட்டத்தில் 66ஆம் சரத்தின்படி ஒருவர் ஒரு காணியில் 66 நாட்கள் இருந்துவிட்டால், அவருக்கு அந்தக் காணியைச் சொந்தம் கொண்டாட முடியம். வீடு, மரம் உள்ளிட்ட அசையாச் கொத்துகள் இருந்தால் அது இன்னும் கூடுதல் பலம்!

வாடகை வீட்டைச் சொந்மாக்கிக்கொண்ட பலர் இங்குதான் வாழ்கிறார்கள்

அப்படியென்றால், 200 வருடங்களாக வாழும் ஓர் இடத்தில் இன்னும் உரிமை இல்லை என்று சொல்லிக் கோசம் எழுப்புவது வெட்கம் கெட்ட அரசியல் இலலையா? மலையகம் எங்கள் தேசம், நாங்கள்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்தோம் என்று சொல்லும் நீங்கள் யாரிடம் உரிமை கேட்கிறீர்கள்? அப்படியென்றால், மலைநாட்டில் தேயிலை நட்டு வளர்த்த நீங்கள் இன்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை.

மலையகத்தின் சொந்தக்காரன் யார்?

ஒரு தரப்பு அடிமையாக வைத்திருப்பது வேறு அடிமைச் சிந்தனையில் வாழ்வது வேறு. இப்போது நீங்கள் சொல்லிக்கொள்ளும் மலையகம் அல்லது சஜித் பிரேமதாச சொல்வதைப்போன்று மலையாளம் இன்னும் அடிமையாகவே கிடக்கிறது. மலைநாட்டின் சொந்தக்காரன் யாரோ வேறு ஒருவன் இருக்கிறான். அவனிடம் அடிமைபட்ட இந்த மலையாளச் சமூகம் அல்லது மலைச் சமூகம் நிலவுரிமை கேட்டுப் போராடத் தொடங்கிவிட்டது.

முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இளஞ்சமூதாயமும் காணி உரிமை கேட்டு உரிமை முழக்கம் எழுப்பி வருகிறது. இந்த முழக்கத்திற்குப் பின்னால் இருப்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்கர்கள் ஆனவர்களின் வரலாறு சுமார் 400 வருடங்கள்தான். அவர்கள் வந்த நாட்டைச் சொல்லிச் சொல்லி இருக்கவில்லை. நாட்டையும் ஆண்டுகொண்டு உலகின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டுப்பெற முடியுமா?

சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டுப்பெற வேண்டிய அவசியம் இல்லை. அவை அனுபவிப்பதால் கிடைப்பவை என்கிறார்கள் அரசியல் மேதைகள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றிலிருந்து உழைப்பு தேடி (பிழைப்பு தேடி அல்ல) அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்கர்கள் ஆனவர்களின் வரலாறு சுமார் 400 வருடங்கள்தான். அவர்கள் வந்த நாட்டைச் சொல்லிச் சொல்லி இருக்கவில்லை. நாட்டையும் ஆண்டுகொண்டு உலகின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

இங்கே நீங்கள் இருநூறு வருட வரலாற்றைச் சொல்லிக்கொண்டு கிஞ்சித்தும் வெட்கமின்றிக் காணி உரிமை கேட்கத் தொடங்கி உள்ளிர்களே! இதனை முட்டாள்தனம் என்பதைவிட வேறு என்ன சொல்வது?

அமரர் தொண்டமான் செய்த ஒரு தவறு!

இப்போது எழுப்பப்படும் ஒரு பிழையான கோசத்தைப்போன்று தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஒரு தவறைச் செய்தார். அதாவது, தொழிலாளி வசிக்கும் வீட்டையும் அந்த வீட்டைச் சேர்ந்த காணியையும் அவர்களுக்கே சொந்தமாக்கு என்று கோரினார். அதுவும் சிந்தனையில்லாத ஒரு கோரிக்கை.

நூறாண்டுகள் கடந்தும் வாழும் வீட்டைச் சொந்தமாக்கித் தாடா என்று எவனிடம் கேட்க வேண்டும்? அவர் என்ன கேட்டிருக்க வேண்டும், எமக்குச் சொந்தமான வீட்டுக்கும் காணிக்கும் எழுத்துமூல உறுதிப்பத்திரம் தாடா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். தொண்டமானின் அந்தக் கோரிக்கைக்குப் பின்னர்தான் தோட்டங்களில் தொழிலாளர்கள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளவோ, வீட்டைத் திருத்தம் செய்யவோ முடியாது என்று தோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இப்போதும் அதே தவறுதான் நடக்கிறது. காணி உரிமை, நிலவுரிமை தா! என்று கேட்பது சரியா, அல்லது எமக்குச் சொந்தமான காணிக்கு உரிமச் சான்றிதழ் தா என்று கோருவது சரியா? என்பதை தொழிலாளர்களைக் காண்பித்துத் தொழில் நடத்தும் என்ஜிஓக்காரர்களும் அரசியல்வாதிளும் சிந்திக்க வேண்டும்.

மலைக்குருவி

Author

Related posts