நோர்வூட் பிரதேச சபையிலும் தேமசக்தி ஆட்சி அமைத்துள்ளது.
நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தவிசாளர், உப தவிசாளர், தெரிவு இன்று (27) காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நடராஜா சிவக்குமார் சபையின் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நோர்வூட் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.
இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கணபதி குழந்தைவேல் ரவி ஆகியோர் தவிசாளர் பதவிக்காக போட்டியிட்டனர்.
இதற்காக பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், அதில் 12 வாக்குகளை பெற்று சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கணபதி குழந்தைவேல் ரவிக்கு 07 வாக்குகளே கிடைக்கப்பெற்றன.
தவிசாளர் தெரிவின் போது ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவர் நடுநிலை வகித்தார்.
இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நடராஜா சிவக்குமார் பெயர் முன்மொழியப்பட்டது.
அதனையடுத்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக குழந்தைவேலு இராஜேந்திரன் பெயர் முன்மொழியப்பட்டது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நடராஜா சிவக்குமார் 12 வாக்குகளை பெற்று சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட குழந்தைவேலு இராஜேந்திரன் 06 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
உப தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஒருவரும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவரும் நடுநிலை வகித்தனர்.
நோர்வூட் பிரதேச சபை (20 உறுப்பினர்கள்)
- தேசிய மக்கள் சக்தி – 06
- ஐக்கிய மக்கள் சக்தி – 05
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 06
- சுயேட்சை குழு – 01
- ஐக்கிய தேசியக் கட்சி – 01
- ஜனநாயக தேசிய கூட்டமைப்பு – 01
-க. கிருஷாந்தன்