இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ‘ஜி7’ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி.
அங்கு பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அண்மைகாலமாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வு மறைந்து, புதிய தொடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா பிரதமருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
“இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. நானும் பிரதமர் கார்னியும் இணைந்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்,” என்றும் பிரதமர் மோடி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.