காணி நிலம் வேண்டும் தேமசக்தி!: மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மைகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி நிலம் வேண்டும் பரா சக்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியதைப்போன்று திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,
‘அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது இந்த அரசாங்கத்தக்கு உண்மையாகவே கரிசனை இருக்குமானால் உடனடியாக 10 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும். அதனை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என 6 மாதங்களாக கூறி வருகின்றனர். ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மலையக மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.” – என்றார்.
மலையக நிருபர் கிருஷாந்தன்