வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் இருந்ததாகக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மிரட்டல்கள் காரணமாக விமான சேவை நிறுவனங்கள் பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா விமான சேவை நிறவனங்களின் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
போலியாகத் தகவலை முதலில் பரப்பி அதனை நம்பாமல் இருக்கச் செய்துவிட்டுப் பாரிய தாக்குதலை நடத்துவதற்குப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாமோ என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, மக்கள் கலக்கம் அடைந்திருப்பதோடு இந்திய பாதுகாப்புத் தரப்பினரும் பெரும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
